வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாரால் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
வழக்கு விசாரணையில் இளைஞன் சார்பாக 50க்கும் மேற்பட்ட பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
வழக்கு விசாரணையின் பின்னர் சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
வழக்கு விசாரணை இன்று பிற்பகல் ஆரம்பாகியது. இதுவரை நடைபெற்ற மரண விசாரணையின் அடிப்படையில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் கட்டளைகள் சிலவற்றை வழங்கியது.
இன்று 5 சாட்சியங்கள் தமது சாட்சிகளை பதிவு செய்தனர். அதில் மூன்றாம் சாட்சியாளர், இறந்த இளைஞனுடன் தானும் தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரிவித்தார். அவரின் சாட்சியத்தைக் கொண்டு சாட்சியாளர் பெயர் குறிப்பிட்டு அடையாளம் கூறிய 2 பொலிஸார் மற்றும் அங்க அடையாளங்கள் அடிப்படையில் அடையாளம் கூறிய மூவர் அடங்கலாக ஐவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.
மேலும் பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் தாக்கப்பட்டதாக கூறிய இடங்களை விஞ்ஞான ரீதியாக அடையாளம் காண சாட்சியை அழைத்து செல்ல உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது. சாட்சியின் பாதுகாப்பு கருதி சட்டத்தரணிகள் இருவர் உடன் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.
அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி மயூதரன் காயத்தை விபரித்ததோடு காயம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டதே பிரதான காரணம் என சாட்சியளித்தார்.
மரண விசாரணைகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பொலிஸார்
நாட்டை விட்டு வெளியேறாத வகையில் நீதிமன்றம் பிரயாணத்தடை விதித்தது.
விசாரணையில் பொலிஸார் நால்வரே அடையாளம் காணப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில்,
சாட்சியின் அடையாளத்தை வைத்து மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
இதுவொரு ‘மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை’ என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்துள்ளது.
இளைஞன் மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
விசாரணை விரைவாக இடம்பெற ஏதுவாக எதிர்வரும் திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது- என்றார்.
1 comment
[…] வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் […]