96
நாட்டில் இடம்பெற்று வரும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் வசித்துவரும் மிக வருமானம் குறைந்த குடும்பங்களை இலக்கு வைத்து இந்த சிறுநீரக வர்த்தகம் இடம்பெற்று வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 15 மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வசிக்கும் நான்கு பேர் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே, மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகத்தை யார் கொடுத்தார்கள்?,யாருக்கு கொடுத்தார்கள்?, இந்த பரிமாற்றத்துக்கு பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றனவா? போன்ற விடயங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
இருப்பினும், இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு முறையான விதத்தில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என நீதிமன்றில் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினர் மன்றுரைத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த வருடமும் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரக வர்த்தகம் இடம்பெற்றது என் தகவல்கள் வெளியாகியிருந்தன. இருப்பினும் குறித்த வைத்தியசாலையில் மீண்டும் சிறுநீரகம் தொடர்பான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.