இந்த ஆண்டு 1.5.2024 அன்று குருபகவான், கிருத்திகை நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷம் ராசியில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் 2-ம் பாதம் ரிஷபம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த நிலையில் 12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலனை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்:
இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்திற்குச் செல்கிறார். இதனால் உங்கள் வாக்கின் செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகள் பயம் நீங்கும். ஆயுள் ஆரோக்யம் சீராகும், பணி, தொழிலமைப்பில் தடைகள் நீங்கி முன்னேற்றம் உருவாகும். பிள்ளையார் வழிபாடும், பெருமாள் ஆராதனையும் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.
ரிஷபம்:
தற்போதைய பெயர்ச்சியில் குருவானவர், உங்கள் ராசிக்கு அதாவது ஜன்ம ராசியான ரிஷபத்திற்கு வருகிறார். இது ஜன்ம குரு காலம் என்று யாராவது அச்சுறுத்தினால் பயப்பட வேண்டாம். இதனால் பூர்வீக சொத்துகள் சேரும். அதேசமயம் விட்டுக் கொடுத்தலும், வீண் ரோஷம் தவிர்ப்பதும் முக்கியமாகும். துர்க்கை, தட்சிணாமூர்த்தி வழிபாடு வாழ்வை செழிக்க வைக்கும்.
மிதுனம்:
இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்துக்கு வருகிறார், குருபகவான்.இதனால் உங்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கும், மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அதேசமயம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசவேண்டாம். மதுரை மீனாட்சி, முக்குறுணி விநாயகர் வழிபாடு விசேஷ நன்மை தரும்.
கடகம்:
இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்துக்கு வருகிறார். இதனால், வீடு, வாகனம் சேரும், பழைய வழக்குகள் சுமுகமாகத் தீர்வாகும். தம்பதியரிடையே இருந்த விரிசல்கள் நீங்கும். என்றாலும் தேவையற்ற தர்க்கம் தவிர்ப்பது நல்லது. பஞ்சவடி அனுமன், ராகவேந்திர மகான் வழிபாடு, வாழ்வை வளமாக்கும்.
சிம்மம்:
குருபகவான், இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்திற்கு வருகிறார். இதனால் உங்கள் வாக்கு வன்மை அதிகரிக்கும். பூர்வீகப் பிரச்னைகள் தீரும்.தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். திருவண்ணாமலை சுவாமி, அம்பாள் வழிபாடு சிறப்பான நன்மை தரும்.
கன்னி:
இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார். இதனால், ரத்தபந்தங்களிடையே உங்கள் மதிப்பு உயரும், சுபகாரியத் தடைகள் நீங்கும். தொட்டவை துலங்கும். அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பதவி, பொறுப்புகள் மனம்போல் கைகூடும். நரசிம்மர், பைரவர் வழிபாடு நன்மைகள் பல சேர்க்கும்.
துலாம்:
தற்போதைய பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு வருகிறார். இதனால் உங்கள் முயற்சிகள் பலிதமாகும், வாக்கில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். ரத்த பந்த உறவுகளால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். தேவையற்ற வாக்குவாதம் எவருடனும் வேண்டாம். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு, சகல நன்மையும் தரும்.
விருச்சிகம்:
இந்தப் பெயர்ச்சியில் குரு பகவான், உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு வருகிறார். இது லாபத்தை அதிகரிக்கச் செய்யும், சகோதர வழியில் ஆதாயத்தை ஏற்படுத்தும். பணியிடத்தில் உங்கள் பெருமை உயரும். மேலதிகாரிகள் ஆதரவினால் பதவி, ஊதியம் உயரப்பெறுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடும். முருகன், துர்க்கை வழிபாடு முன்னேற்றம் தரும்.
தனுசு:
இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு வருகிறார். உங்கள் பணியிடம் மேன்மை பெறும். தொழிலமைப்பு சீராகும். வார்த்தையில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் அனுகூல சூழல் நிலவும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வு, இடமாற்றம் நிச்சயம் கைகூடும். ராமர், சீதை, அனுமனை ஆராதிப்பது வாழ்வை இனிமையாக்கும்.
மகரம்:
இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு வருகிறார். சகல விதத்திலும் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும் எனக் காட்டுகிறது. அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளுடன் கலந்துரையாடும் அளவுக்கு பேசப்படுவீர்கள். இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். விநாயகர், அனுமன் வழிபாடு, விசேஷ நன்மைகள் தரும்.
கும்பம்:
இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கு வருகிறார். இதனால் உங்கள் உடல்நலம் சீராகும், தொழிலமைப்பு ஏற்றம் பெறும். பணவரவு இருந்தாலும் செலவுகள் சேர்ந்து வரும். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு தொழில் நிரந்தரமாகி மகிழ்ச்சி சேர்க்கும். சிவன்-பார்வதி, பெருமாள்-தாயார் வழிபாடு சீரான நன்மை தரும்.
மீனம்:
இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு வருகிறார். இதனால், குடும்பத்தில் அமைதி நிலவும், பூர்வீக சொத்து சேரும், வரவு சீராக இருக்கும். அதேசமயம் எதிலும் தலைகனம் தவிர்ப்பது அவசியம். அலுவலகத்தில் நன்மைகள் அதிகரிக்கும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தாயார், கொடி மர கருடன் வழிபாடு, சிறப்பான நன்மை தரும்.