89
அண்மையில், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த மூவரும் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஹயஸ் வாகனம் மற்றும் இரண்டு வாள்களும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை தெல்லிப்பழைபொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதியில், ஹயஸ் வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று, வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியது. சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
தாக்குதல் நடத்தி விட்டு குறித்த குழு அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அவர்களை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக யாழ் மாவட்டக் குற்றத் விசாரணை பிரிவு தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கிளிநொச்சி பகுதியில் வைத்து, நேற்று கைது செய்தனர்.
கைதானவர்களிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், 6 மாதங்களுக்கு முன்னர் தெல்லிப்பழை பகுதியில் வைத்து ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, பழிவாங்கும் நோக்குடனே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், தலைமறைவாகியுள்ள ஏனைய மூவரையும் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.