94
நோய் அறிகுறிகள் காணப்படின் உடன் வைத்தியசாலையை நாடுமாறு யாழ்ப்பாண மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொது வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா மேற்படி தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்து தலையிடி, சத்தி, வயிற்றோட்டம், மூட்டு நோ உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால், அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடுவது சிறந்தது.
இரு நாட்களுக்கு குறைவாக காய்ச்சல் காணப்பட்டால், நன்றாக ஓய்வெடுத்து நீராகராத்தை குடித்தால் நல்லது.
இதேவேளை, இரு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளர்கள், வேறு நோயுள்ளவர்கள் மற்றும் வீட்டில் பராமரிக்க ஆட்கள் இல்லாதவர்கள் உடன் ஏற்பட்டால் வைத்தியசாலையை நாட வேண்டும்.
குறிப்பாக, குருதிப் பரிசோதனையில் வெண்கலங்களின் எண்ணிக்கை 5,000 க்கு குறைவாகவும், குறுதிச்சிறுதட்டு எண்ணிக்கை 130, 000 க்கு குறைவடைந்தால், வைத்தியசாலையை நாட வேண்டும்.
நுளம்பு இடும் முட்டை வரட்சியான காலத்தில் ஆறு மாதங்களுக்கு உயிர்ப்பில் இருக்கும். மழை காலங்கள் மற்றும் நீர் தேங்கும்போது நுளம்பு பெருக்கம் அதிகரிக்கும். நுளம்பு அதிகரித்தால் டெங்கை கட்டுப்படுத்த முடியாது. வீடு, சுற்றாடல், வீதி என்பவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
டெங்கு நுளம்பு காலை வேளையிலும், மாலை வேளையிலும் அதிகம் உலாவும். குறித்த வேளையில் மக்கள் வெளியில் உலாவுவதை தவிர்க்க வேண்டும். அத்துடன் நுளம்பு வலைகளை பாவிக்க வேண்டும். நுளம்பு கடிக்காதவாறு உடலில் தைலங்களை பயன்படுத்த முடியும் என்றார்.