118
இலங்கையில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன.
இருப்பினும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், அச்சுறுத்தி பழிவாங்கும் செசெயற்பாடுகளும்இன்னமும் அரச ஒட்டுக்குழுக்களாலும் பொலிஸாராலும், இராணுவம் மற்றும் புலனாய்வுதுறையினராலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே, தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மாவீரர் நாளன்று வவுனியாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். அத்துடன் ஊடகவியலாளரும் ஊடக அமையத்தின் தலைவருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
ஆகவே நாட்டில், இடம்பெறுகின்ற ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று
மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரையும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தை வலுப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.