நடிகர் போண்டா மணியின் மறைவு குறித்து நகைச்சுவை நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் பேசும்போது, நடிகர் வடிவேலு வராததை கண்டித்து பேசினார்.
தமிழ் நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது திடீர் மரணம் திரையிலகினர் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவரது மறைவுக்கு உடன் இணைந்து நடித்த செந்தில், சிங்கமுத்து, சிசர் மனோகர், சாரப்பாம்பு சுப்புராஜ் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் முக்கிய நடிகரான வடிவேலு அஞ்சலி செலுத்த வரவில்லை. இதனால் பலர் அவர் மீது விமர்சனத்தை முன் வைத்தனர்.
குறிப்பாக நகைச்சுவை நடிகர் கணேஷ்கர், உங்கள் உதவியை எதிர்பார்க்கும் சிறிய நடிகர்களுக்கு நடிக்க மட்டுமாவது உதவி செய்யுங்கள் என்று வடிவேலுவை குறிப்பிட்டு பேசினார்.
அதேபோல், போண்டா மணி குறித்து செய்தியாளர்களை சந்தித்த சாரப்பாம்பு சுப்புராஜ் கூறும்போது,
‘போண்டா மணி எல்லோருக்கும் நல்லது செய்வார். நேற்று கூட காலையில் அவருடன் போனில் பேசினேன். என் பேச்சை கேட்பார்.
நான் நிறைய திட்டி இருக்கிறேன். பிறகு நானே போய் பேசினேன். போண்டா மணி குடும்பத்திற்கு வசதி இல்லை.
திரையுலகினர் அனைவரும் சேர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஏதாவது செய்ய வேண்டும். இலங்கைக்கு போக வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.
தனது பிள்ளைகளை ஈழத்திற்கு கூட்டிச் சென்று காட்ட வேண்டும் என விரும்பினார். பாஸ்போர்ட் வரும்போது அவர் இல்லாமல் போனது வருத்தமாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்த வராதது குறித்து காட்டமாக பேசினார்.
அவர் கூறுகையில், “வடிவேலு யார் செத்தாலும் போக மாட்டார். விவேக், மனோபாலா, மயில்சாமி, அல்வா வாசு, நெல்லை சிவா, கிருஷ்ணமூர்த்தி என அவருடன் நடித்த பலர் இறந்த போதும் அவர் நேரில் செல்லவில்லை.
அதேபோல் கல்யாணத்திற்கும் கூட யார் வீட்டிற்கும் அவர் போக மாட்டார்” என தெரிவித்துள்ளார்.