105
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம், அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கு சார்பாக சிறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இம்ரான் கான் மீது தோஷகானா ஊழல் வழக்கு உட்பட 150க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர் மீது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதில் பெரும்பான்மை பெறாததால் இம்ரான் கான் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை கைது செய்ததை கண்டித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதையடுத்து, இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவர் சித்திரவதை செய்யப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
அவரை சிறையில் விசாரணை நடத்த கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, சிறையில் விசாரணை நடத்த நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் இம்ரான் கானை சிறையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அல்- காதர் பல்கலைக்கழகத்தை நிறுவ 57 ஏக்கர் நிலம் இம்ரான் கானுக்கு பரிசாக வழங்கப்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்ட அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக, நேற்று லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு இம்ரான் கானை சிறையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்துள்ளனர்.
கடந்த 15ம் திகதி முதல் அக்குழுவினர் அடியாலா சிறைக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.