வங்குரோத்தடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் நடைமுறிப்படுத்டுவது தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போது அவர் இந்து விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் உருவாக்கும் கற்பனைக் கதைகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கற்பனைக் கதைகளில் சொல்லப்படும் விடயங்களை நிறைவேற்ற முயற்சிப்பதன் மூலம் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்குரோத்தடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகிய இரண்டு அடிப்படைக் காரணிகளை உரிய முறையில் கையாள்வதன் மூலம் நல்ல பலன்களைப் பெற முடிந்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை தொடர்வதன் மூலம் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையின் அங்கீகாரத்துடன், இலங்கையின் நிதித்துறையை பெரிதும் பலப்படுத்தும் வைப்புத்தொகை காப்புறுதிக்காக உலக வங்கியில் இருந்து 150 மில்லியன் டொலர் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.