111
சென்னையில் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இலங்கை செல்ல முயன்ற போது திபெத் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நேற்று (டிசம்பர் 08) அதிகாலை 1:30 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து வந்தனர்.
அப்போது நேபாள நாட்டின் பாஸ்போர்ட்டுடன் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இலங்கையின் கொழும்புவிற்கு செல்வதற்காக வந்துள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் குடியுரிமை அதிகாரிகள் கேள்விகள் கேட்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில், குறித்த இளைஞர் திபெத் நாட்டினை சேர்ந்தவர் என்றும், போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இலங்கை செல்ல முயன்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.
அதன் பின்னர் அவரை கைது செய்த அதிகாரிகள், அவர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் வாய்ப்பு உள்ளவரா அல்லது சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்ககூடுமா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் திபெத்தில் இருந்து இந்தியாவுக்கு எப்போது வந்தார், எப்படி வந்தார், இவருக்கு பாஸ்போர்ட் எங்கே கிடைத்தது என்ற விசாரணையில் மத்திய உளவுப் பிரிவான IB, Q Branch பொலிஸார் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.