Deepfake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை ராஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் பிரபல நடிகை ராஷ்மிகாவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது.
ஆனால், அது Deepfake தொழில்நுட்பம் மூலம் வேறு பெண்ணின் உடலுடன் சேர்த்து போலியாக சித்தரித்த வீடியோ என்று பின்னர் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து நடிகை கஜோல் உள்ளிட்ட சில பிரபலங்களின் வீடியோக்களும் போலியாக சித்தரிக்கப்பட்டு வெளியாகின.
இது பெரும் சர்ச்சையாக கிளம்பிய நிலையில் ராஷ்மிகா தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
மேலும், சைபர் கிரைம் பொலிஸார் Deepfake வீடியோவை வெளியிட்ட நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் டெல்லி பொலிஸார், ராஷ்மிகாவின் முகத்தை பயன்படுத்தி Deepfake வீடியோ வெளியிட்ட நபரை கைது செய்துள்ளனர்.
முன்னதாக, இவ்வாறு போலி வீடியோவை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என இந்திய அரசு எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.