124
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் பேருந்து பிரேக்குகள் செயலிழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Iloilo மாகாணத்திலிருந்து ஒரு பயணிகள் பேருந்தானது, நேற்று மதியம் Culasi நோக்கி சென்று கொண்டிருந்தது.
வளைவான சாலைகளை கொண்ட அந்த பள்ளத்தாக்கு சாலையில், பேருந்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்தன.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் நூறு அடிகள் உயரம் கொண்ட பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த ஓட்டுநர் உட்பட 16 பேர் பலியானார்கள்.
இந்த பேருந்தில் மொத்தம் 53 பேர் வரை பயணம் செய்திருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீதம் உள்ளவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 8 பேரின் நிலை மிக கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து ஒரு வானொலி நிலையத்திடம், ஆன்டிக் ஆளுநர் ரோடோரா காடியாவோ கூறுகையில், நாங்கள் இதை கொலைகார வளைவு (killer curve) என்று கூறுவோம். இங்கு இதுமாதிரி சம்பவம் நடப்பது இது முதல்முறை இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்துள்ளார்.
அரசாங்க முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் இச்சம்பவம் குறித்து “இது மிகவும், மிகவும் வருந்தத்தக்கது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் சடலங்களை மீட்ட நிலையில் மீட்புப் பணி நிறுத்தப்பட்டது.