தாயக விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்கள் மற்றும் தேசப்பணிகளில் பற்றுதியோடு பயணித்த மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், இனப்படுகொலைக்குள்ளான பொதுமக்கள் ஆகியோரை நினைவுகூர்ந்து ஒவ்வொரு மாதமும் நடைபெற்றுவரும் மாதாந்த வணக்க நிகழ்வு இன்றைய நாளும் ஞாயிற்றுக்கிழமை 28/01/2024 உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருந்தது.
கடந்த ஆண்டுகளில் தை மாதங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரச்செல்வங்களின் திருவுருவப் படங்கள் மற்றும் மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் ஆகியோர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு அவர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் அழைக்கப்பட்டு இம் மாதாந்த வணக்க நிகழ்வு இம்முறையும் மிக உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றி, அகவணக்கமும் செலுத்தப்பட்டு, தொடர்ந்து மாவீர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றி, மலர்வணக்கமும் அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் தியாகங்கள் நிறைந்த வீரவரலாறுகளும் போராளிகளால் நினைவுப் பகிர்வுகளாக பகிரப்பட்டது.
வங்கக்கடலில் காவியமான கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களினதும் நினைவுகள், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் கப்டன் பண்டிதர், மகளிர் படையணியின் தளபதி மேஜர் சோதியா, படையப்புலனாய்வு பொறுப்பாளர் கேணல் சாள்ஸ், கடற்கரும்புலிகளான லெப்.கேணல் நளா, மேஜர்.வஞ்சியின்பன்.
கடற்புலி மாவீரர்களான லெப்.கேணல் ஒஸ்கார், லெப்.கேணல் எரிமலை, மேஜர்.இன்பநிலா உட்பட தை மாதங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களது வரலாறுகள் போராளிகளால் நினைவு கூரப்பட்டது.
தமிழர் மீதான இனப்படுகொலையை கண்டித்து, 2009ம் ஆண்டு போர் நிறுத்தத்தை வேண்டி தமிழகத்தில் தீக்குளித்து தன்னுடலை எரித்தழித்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரனையும் நினைவிறுத்தி இம்மாத நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றது.
வரலாற்றையே வழிகாட்டியாகக் கொண்ட எம் மாவீரரின் இலட்சியப் பயணத்தை நாம் பின்தொடர்வோம். வரலாறு எம்மை வழிநடத்திச் செல்லட்டும்.
நன்றி
தமிழீழ மாவீரர் பணிமனை.