73
மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய இரண்டு தரப்பினர் இடையே நடந்த சண்டையில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் தெங்னவ்பால் மாவட்டத்தின் சைபோ அருகில் உள்ள லெய்து எனும் கிராமத்தில் நேற்று இரு குழுவினரிடையே மோதல் நடந்துள்ளது.
இதில் அப்பகுதியில் இருந்த கிளர்ச்சியாளர்கள் குழுவிற்கும், தடை செய்யப்பட்ட மக்கள் படை எனும் ஆயுதம் ஏந்திய இயக்கத்தினரிடையே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
நீண்ட நேரமாக துப்பாக்கிச்சூடு நடந்ததையடுத்து தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கே விரைந்தனர்.
காவலர்கள் வந்து பார்க்கும் போது அங்கே தாக்குதல் நடத்திய யாரும் இல்லை.
தாக்குதலில் கொல்லப்பட்ட 13 நபர்களின் சடலங்கள் மட்டுமே இருந்துள்ளன.
மேலும் சடலங்கள் அருகே எந்த ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை.
கொல்லப்பட்டவர்கள் மற்றும் கொலையாளிகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.
இந்தியாவுடனான மியான்மார் நாட்டின் சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிற்குள் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னதாக, நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கலவரம் நடந்த நிலையில் ஆங்காங்கே இதுபோல தாக்குதல் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.