சென்னையில் 40 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று முடிவுற்று புதிய அரசு மத்தியில் பதவியேற்றுள்ளது. முன்னதாக, தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
இதையடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். காவல் துறையை பொறுத்தவரை காவலர்கள் முதல் டிஜிபி-க்கள் வரை பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்தனர்.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு பணிக்குச் செல்ல மனுக்கள் கொடுக்கலாம் என டிஜிபி-யான சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையடுத்து சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த போலீஸார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனுக்களை அளித்தனர்.