212
யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்துள்ள நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாட விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், யாழ்ப்பாண மாவட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்குவதற்கு, கொழும்பிலிருந்து 16 மில்லியன் ரூபா பெறுமதியான 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்கு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டது.
குறித்த உருளைக்கிழங்கு விதைகள், பழுதடைந்துள்ளன என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறித்த விதை உருளைக்கிழங்குகள், யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் உள்ள களஞ்சியத்தில் இறக்கப்பட்ட நிலையில், அவை பழுதடைந்து காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள், குறித்த விதை உருளைக்கிழங்கை நடுகை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.