தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. இவர் சமீபத்தில் அதிரடியாக அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால், அதிமுக கட்சியில் நடந்த பல்வேறு சம்பவங்களை பொதுவெளியில் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தினார். அதில், “கடந்த 2017ம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டனர். அதில், நடிகை த்ரிஷாவும் இருந்தார். நடிகர் கருணாஸ்தான் த்ரிஷாவுக்கு ரூ.25 லட்சம் கொடுத்து அழைத்து வந்தார்” என்றார்.
இது பெரும் சர்ச்சையான நிலையில், நடிகை த்ரிஷா இது குறித்து தனது X தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனி சட்டப்படி நடவடிக்கை பாயும்” என குறிப்பிட்டுள்ளார்.