ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்காதீர்கள் என கன்னட நடிகர் யஷ் கூறியுள்ளார்.
பிரபல கன்னட நடிகர் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களான ஹன்மந்த், முரளி நடவினமணி மற்றும் நவீன் ஆகிய மூன்று பேர் கட்அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனை அறிந்த நடிகர் யஷ், உயிரிழந்த ரசிகர்களின் வீடுகளுக்கு சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் அவர்களின் குடும்ப செலவுகளை தானே ஏற்பதாகவும் உறுதியளித்தார்.
மேலும் அவர் இச்சம்பவம் குறித்து கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளின்போது இத்தகைய அசம்பாவிதங்கள் நடப்பதை கண்டால், பிறந்தநாள் என்றாலே எனக்கு பயம் வருகிறது.
அசம்பாவிதங்கள் நடந்தால், குடும்பத்தினரின் கதி என்ன? யார் வேண்டுமானாலும் பண உதவி செய்வர். ஆனால் இறந்த மகன் மீண்டும் வருவாரா? எங்களை பற்றி யோசிக்காதீர்கள்.
ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்காதீர்கள், பைக்கில் என்னை பின் தொடராதீர்கள். நற்பணி செய்யுங்கள், அதுவே போதும். தாய், தந்தையை மதியுங்கள். பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்!’ என தெரிவித்துள்ளார்.