68
இமாச்சலப் பிரதேசத்தில் “கோர்வியோ காயின்” அல்லது “கேஆர்ஓ காயின்” என்ற பெயரில் கிரிப்டோ கரன்சி டிரேடிங் செய்து 1 லட்சம் பேரை ஏமாற்றியுள்ளனர். இதில் அரசு பணியாளர்களும் அடக்கம் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.
முதலாவதாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள், மற்றவர்களை சேர்த்து விடுவதன் மூலம் அவர்களுக்கான கமிஷனும் வழங்கப்பட்டது.
நல்ல கமிஷன் கிடைத்ததால் சில அரசுப்பணியாளர்கள் தனது அரசு பணிக்கு கட்டாய ஓய்வு கொடுத்துவிட்டு முழுநேரமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில், 4 வழிச்சாலைக்காக நிலங்களை கொடுத்து இழப்பீடு பெற்றவர்களை குறிவைத்த ஏஜெண்ட் கும்பல், அவர்களிடமிருந்து அதிகளவு முதலீடுகளை ஈர்த்துள்ளது.
அதிக லாபம் என்ற ஆசையின் காரணமாக சுமார் 5,000 அரசு ஊழியர்கள் இதில் முதலீடு செய்ததாக தெரியவந்துள்ளது.
மோசடி கும்பல் போலி இணையதளங்கள் மூலம் கிரிப்டோ கரன்சியின் மதிப்பை உயரத்தி காட்டி ஏமாற்றியுள்ளனர். மேலும்
சிறப்பாக செயல்பட்டு முதலீடுகளை ஈர்த்த ஏஜெண்ட்டுகளை, மோசடி கும்பல் தாய்லாந்து, துபாய் என வெளிநாட்டு சுற்றுலாவுக்கும் அழைத்து சென்றுள்ளது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/IMG-20231111-WA0012-300x205.jpg)
இத்திட்டத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்ப பெற முடியாததால் சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்கள் பணத்தை இழந்துள்ளனர்.
இதன் காரணமாக அதிகமான வழக்குகள் வந்ததையடுத்து, கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்ட 18 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இருப்பினும் மோசடி கும்பலின் தலைவர் சுபாஸ் தலைமறைவாகிவிட்டார்.
இந்த மோசடியில் ஈடுபட்ட இரண்டாம் கட்ட நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கியுள்ளதாக இமாச்சல பிரதேச டிஜிபி சஞ்சய் குண்டு தெரிவித்துள்ளார்.