பெண் போலீசார் குறித்து சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ‘ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர் டில்லியில் கைது செய்தனர்.
‘ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனலில் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதுாறு கருத்துகளை தெரிவித்துள்ளார் என சேலம் மாநகர போலீசின், சோஷியல் மீடியா பிரிவு எஸ்.ஐ., கீதா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து அவதுாறு பரப்புதல், பணிபுரிய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி தவறான கருத்துகளை வெளியிடுதல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில், சங்கர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போது சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ‘ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கோர்ட் இதனை நிராகரித்தது. அநாகரீகமாக விவாதம் செய்த ரெட் பிக் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர் டில்லியில் கைது செய்தனர். ரயில் மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட உள்ளார்.