தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் சலவைத் தொழிலாளி ஒருவரின் மகன் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
காஞ்சிபுரத்தின் சேக்குப்பேட்டை சாலியர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவர் ஒரு சலவைத் தொழிலாளி.
இவரது மகனான பாலாஜி சட்டக்கல்லூரியில் பயின்று, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுகப்பிரியன் என்பவரிடம் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஆகத்து மாதம் நடந்த சிவில் தேர்வில் 12,500 பேருடன் தேர்வு எழுதினார்.
அதில் தேர்ச்சி பெற்ற பாலாஜி, நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் சிறப்பாக செயல்பட்டார்.
இதன்மூலம் 11ஆம் திகதி வெளியான தேர்வு முடிவுகளின்படி, பாலாஜி சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்வில் வெற்றி பெற்றது குறித்து பாலாஜி கூறுகையில், ‘சீனியர் வழக்கறிஞர்கள் பலர் எனக்கு அறிவுரை வழங்கினர், அவர்களின் வழிகாட்டுதலுடன் படித்தேன். தேர்வில் வெற்றி பெற நாள் ஒன்றுக்கு 8 மணிநேரம் வரை படிப்பிற்காக செலவு செய்தேன்.
எனது பணி காலத்தில் நேர்மையாகவும், வழக்குகளை விரைந்து முடிக்கும் நிலையை கையாளுவேன். இளம் வழக்கறிஞர்கள் காவல் நிலையம் செல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகளை நேர்மையாக முடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை’ என தெரிவித்துள்ளார்.