விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் கிஷோர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை தரப்படுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், காவல்துறையினர் அவர்களை தடுக்க கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதையடுத்து மோதல் வெடித்தது.
பின்னர் நடந்த தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.
இதனால் இரண்டு நாட்களுக்கு போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரபல நடிகர் கிஷோர் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், ”நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்குவதை உறுதி செய்து, ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளை கூட விட்டுவிடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை உண்டு வாழும் இந்த பக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள்.
இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்ல முடியும்? விவசாயிகள் போராட்டத்தின்போது களத்தில் சாலைகள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தன் பதிவில், “ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது.
விவசாயிகள் முதலில் மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குகளினால் தைரியமடைந்து, தங்களுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்”என ஆவேசமாக கூறியுள்ளார்.