இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், அரசியல் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்த கவுதம் காம்பீர், டில்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 6.95 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து எம்பியாக இருந்து அவர், அவ்வப்போது கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சியாளர், ஆலோசகர் என இருந்து வந்தார். தற்போது KKR அணியின் பயிற்சியாளராகவும் உள்ளார்.
இதற்கிடையில் இந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தரவில்லை என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில், காம்பீர் தனது X தளத்தில், “அரசியல் தொடர்பான பணிகளில் இருந்து விடுவிக்கும்படி பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இதன் மூலம் கிரிக்கெட் தொடர்பான பணிகளில் என்னால் கவனம் செலுத்த முடியும். மக்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார்.