இலங்கையில் சத்திரசிகிச்சையின் போது ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்டதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண் அண்மையில் மார்பக புற்றுநோய் சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்றிரவு (29) குறித்த பெண் சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பி சத்திரசிகிச்சை அறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு தேவையான ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு தவறாகக் கொடுக்கப்பட்டதாக சுகாதார தொழிற் சங்கங்கள் கூறுகின்றன.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரே அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லனவிடம் நாம் வினவியபோது, குறித்த பெண் நேற்றிரவு சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்ததாக குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவித்துள்ளார்.