இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை தனக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து, தற்போது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான நிகழ்வுகளில் சந்திரிக்கா பண்டாரநாயக்க பங்கேற்றுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை அரசியலின் தற்போதைய நிலையை தற்போது தான் வெறுப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன், அரசியல் தொடர்பில் கருத்து வெளியிட எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.