தமிழக மாவட்டம் நாமக்கல்லில் நபர் ஒருவர் பாம்பினை கண்டு பயந்து ஓடியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
நாமக்கல்லின் பொத்தனுர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (54). இவர் ஆவின் பால் நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு கிளப்பிய தட்சிணாமூர்த்தி, காரை எடுக்க கதவை திறந்தபோது நாகப்பாம்பும், சாரை பாம்பும் பிணைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் ஒரு குச்சியை எடுத்து அந்த பாம்புகளை விரட்ட முயன்றார். அப்போது நாகப்பாம்பு திடீரென படமெடுத்து ஆடியது.
இதனால் பதறிப்போன தட்சிணாமூர்த்தி அங்கிருந்து தப்பியோடினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, கல்லில் தலை மோதி அவருக்கு பலத்த அடிபட்டது.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, ஏற்கனவே தட்சிணாமூர்த்தி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து தட்சிணாமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.