தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 8ம் தேதி சென்னையில் சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், அது இறுதியில் வதந்தி என பொலிசார் கூறினர். மிரட்டல் விடுத்த நபர்களையும் கைது செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னை மாங்காடு அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் PSBB மில்லினியம் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மட்டுமின்றி, கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து, மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகளுக்கு மட்டுமின்றி இன்று காலை சென்னை தலைமை செயலகத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
ஒரே நாளில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் தமிழக மக்களிடையே சற்று பீதியை ஏற்படுத்தியுள்ளது.