நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கில், பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் போலியான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு காணித்துண்டொன்றை பெற்று கொடுக்கும் விவகாரத்தில், நாமல் ராஜபக்சே அந்த நிறுவனத்திடம் பெரிய தொகையை லஞ்சமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பாக கடந்த ஆட்சியில் நிறுவப்பட்ட பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு ஜே.வி.பியின் முக்கியஸ்தர் வசந்த சமரசிங்க முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி பிரிவில் இருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார, நாமல் ராஜபக்சவையும், அந்த தனியார் நிறுவனத்தையும் காப்பாற்றும் வகையில் 15 முறை போலியான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் கடந்த 2020ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், குறித்த தனியார் நிறுவனத்தில் பணியாளராக பணிக்கு சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதாக கூறப்பட்டது.
இதனால், இது தொடர்பான விஷயங்கள் கோட்டை நீதவான் திலிண் கமகே முன்னிலையில் ஜே.வி.பி. முக்கியஸ்தர் வழக்கறிஞர் சுனில் வடகலவினால் முன்வைக்கப்பட்டது.
அப்போது, லஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.