பெறுமதி சேர் வரி அதிகரித்துள்ளமையால் மத்திய தர வர்க்கத்தினரே அதிகளவில் பாதிப்படைவார்கள் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 15 சதவீதமாக காணப்பட்ட வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெட் வரி அதிகரித்தமை தொடர்பில் கருத்துரைத்த பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல, வரி திருத்தம் காரணமாக முக்கிய பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றிற்கான கட்டணம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிவாயு, எரிபொருள் என்பவற்றின் விலை அதிகரித்துள்ளதுடன் போக்குவரத்து சேவை உள்ளிட்ட சேவைகளின் கட்டணமும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கிராமிய மக்களை விடவும் நடுத்தர வர்க்கத்தினரே அதிகளவில் பாதிப்படைய கூடிய நிலைமை காணப்படுகிறது.
குறிப்பாக நகர்புறங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரும் குறைந்த வருமானம் பெறுவோரும் வெகுவாக பாதிப்படைவார்கள் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.