இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி புதிய பயணம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தைப் போல் புதிய பயணம் ஒன்றையே ஆரம்பிக்கவுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் இன்று புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் தகவல் வெளியிட்டார்.
”ஜனவரி 14ஆம் திகதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பயணம் தொடங்கவுள்ளார். இந்த ஒற்றுமை நடைப்பயணம் ‘இந்தியாவுக்கான நியாயம் கேட்கும் நடைப் பயணம்’ என்ற பெயரை காங்கிரஸ் செயல் குழு ஒரு மனதாக முன்மொழிந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் நியாயம் கேட்கும் நடைப் பயணம் 14 மாநிலங்கள் மற்றும் 85 மாவட்டங்களில் 6,200 கி.மீ. தொலைவுக்கு நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. இது, காங்கிரஸுக்கும், இண்டியா கூட்டணிக்கும் புத்துணர்வு தரும் யாத்திரையாக அமையும். இந்தப் பயணத்தை ராகுல் காந்தி இந்தியாவின் கிழக்கில் தொடங்கி மேற்கில் முடிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.