காலி – கஹவ பிரதேசத்தில் வீடொன்றில் ஆசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (20) அதிகாலை 4 மணியளவில் சமையலறையில் தேங்காய் திருவிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர் வீட்டிற்குள் நுழைந்து ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கோனாபினுவல பிரேமலதா என்ற 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ஆசிட் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் அயலவர்கள் மற்றும் உறவினர்களால் முச்சக்கர வண்டியில் பலப்பிட்டி ஆரம்ப வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பெண் பாடசாலை ஒன்றிற்கு உணவு தயாரித்து வழங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.