மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று(27) இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் உடன் பயணித்த மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரியகல்லாறு மயான வீதியில் இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நிலையில் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் பெரியகல்லாறு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த சந்திரகாந்தன் சதுஸன் என்னும் 16 வயது மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு மாணவர் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான இரண்டு மாணவர்களும் இம்முறை சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.