அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய பாலம் சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பல் மோதியதில் நேற்று (26) இடிந்து விழுந்தது.
நீருக்குள் மூழ்கியவர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான வீடியோ கட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து பால்டிமோர் காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள பாலம் சரக்கு கப்பல் மோதி இடிந்து விழுந்த சம்பவம் நள்ளிரவில் தெரியவந்தது.
இதையடுத்து விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கப்பல் மோதியதில் பாலத்தின் ஒவ்வொரு பகுதியாக அடுத்தடுத்து இடிந்து விழும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது.
மேலும் இந்த சம்பவத்தின்போது பாலத்தில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அவற்றுடன் சேர்த்து டிராக்டர்-டிரெய்லரும் ஆற்றுக்குள் விழுந்தது.
நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.