சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றையதினம் உலகலாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது.

1948ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்துக்கு அமைய வருடந்தோரும் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் நினைவுகூரப்பட்டு வருகின்றது.
உலகலாவிய ரீதியில், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் ‘எதிர்காலத்தில் மனித உரிமைகளையும் கலாச்சாரத்தையும் ஒருங்கிணைத்தல் மற்றும் நிலைநிறுத்துதல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் மனித உரிமைகள் தினம் நினைவுகூறப்படுகின்றது.
ஒவ்வொரு நாட்டிலும், அனைத்து பிரஜைகளுக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதே இந்த பிரகடனத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதேவேளை, அனைத்து பிரஜைகளும் சுதந்திரமானவர்கள் மற்றும் சமத்துவமானவர்கள் என்பதை இந்த பிரகடனம் வலியுறுத்துகின்றது.
1955ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரகடனத்தை இலங்கை ஏற்றுக்கொண்டது. அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்து விடயங்களிலும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அனைத்து நாடுகளினதும் பொறுப்பு என 1993 ம் ஆண்டு இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை வாழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனித உரிமைகள் தினத்தில் விடுத்துள்ள செய்தியில் உறுதியளித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகள் மிகவும் பாதிப்படைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது உலக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!