இந்தியாவில் மென்பொருள் நிறுவனCEO ஒருவர், வெள்ளி விழா கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Vistex எனும் மென்பொருள் நிறுவனத்தின் CEO சஞ்சய் ஷா. 56 வயதான இவர் நேற்று முன்தினம் தன் நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இரும்புக்கூண்டு ஒன்றில் சஞ்சய் ஷா, தனது சக ஊழியர் விஸ்வநாத் ராஜ் தட்லா உடன் ஏறினார்.
இந்தக் கூண்டு 20 அடி உயரத்திற்கு மேலே அந்தரத்தில் தொங்க விடப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கூண்டினை தாங்கிக் கொண்டிருந்த இரும்புச் சங்கிலி ஒருபுறம் உடைந்தது.
இதனால் கூண்டு உடைந்து விழுந்ததில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சஞ்சய் ஷா பரிதாபமாக உயிரிழந்தார். விஸ்வராஜ் தொடர் சிகிச்சையில் உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.