திருமணம் நடக்கவிருக்கும் வேளையில் மாப்பிள்ளை பிடிக்கவில்லையென, மணப்பெண் மாயமான சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
பெண்ணின் பெற்றோர்கள், மணமகனாக உறவினரையே நிச்சயித்துள்ளனர்.
இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.
கடந்த புதன்கிழமை திருமணம் நடக்கவிருந்த நிலையில் கடைக்கு போய் வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்ற மணப்பெண் மாயமானார்.
மணப்பெண்ணை காணாததால் பதறிய பெற்றோர் நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் விசாரணை ஆரம்பித்தபோது, மணப்பெண் அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தது தெரியவந்துள்ளது.
காவல் நிலையத்திற்கு சென்ற மணப்பெண் தனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்றும், பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க பார்க்கிறார்கள் என்று புகார் அளித்துள்ளார்.
மேற்கொண்டு விசாரித்த போது மாப்பிள்ளை சரியில்லை என்று தன்னுடைய தோழிகள் சொன்னதால், தனக்கும் அந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றும், வேறு மாப்பிள்ளை பார்த்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அப்பெண்ணின் பெற்றோரை காவலர்கள் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லை.
இதனால் அந்த பெண் பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். வேண்டுமானால் அரசு காப்பகத்தில் தங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து அப்பெண்ணின் விருப்பத்தின் படி வாலாஜாவில் உள்ள காப்பகத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
1 comment