வாகனத்தில் வலது பக்கம் சிக்கலைபோட்டுவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ரணில் விக்கிரம சிங்க தேர்தல் நடாத்தப்போகின்றேன் என கூறும் போது சற்று சந்தேகம் வருகின்றதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.
நேற்று மாலை மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தொகுதிக்கிளை கூட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு நடைபெறுவதையொட்டி தொகுதிக்கிளைகளின் கருத்துகளை பெறுவதற்கான கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டாலும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவு கோரும் வகையிலான கூட்டமாக நடைபெற்றதாக கட்சி தகவல்கள் தெரிவித்தன.
இந்த கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.