தமிழ்நாட்டில் வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில், அடுத்த 4 நாட்களில் வெப்பம் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடந்த பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்தது. மிக்ஜாம் காரணமாகச் சென்னை மற்றும் அண்டை வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்த நிலையில், அதன் பிறகு தென் தமிழகத்தில் அதி தீவிர கனமழை கொட்டியது.
ஜனவரி முதல் வாரம் வரை பருவமழை சிறப்பாகப் பெய்தது. பருவமழை சிறப்பாக இருந்ததால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பின.
இருப்பினும், பருவமழை முடிந்த உடனே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. எப்போதும் ஏப்ரல் மாதம் தான் வெப்பம் உச்சம் தொட்டு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகும். ஆனால், இந்த முறை பிப். மாதமே வெப்பம் பல இடங்களில் உச்சம் தொட ஆரம்பித்துவிட்டது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
“29.03.2024 முதல் 01.04.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
02.04.2024 மற்றும் 03.04.2024 தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பினை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.