வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த தாழமுக்கம் வலுவடைந்துள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தாழமுக்கம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 380 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இந்தத நிலையில், நாளை சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் காணப்படுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரையான வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக, பொத்துவில் வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பரப்புகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்வதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களுக்கு சென்றுள்ள மீனவர்கள், கடற்பயணம் மேற்கொள்வோர் உடன் கரைக்குத் திரும்ப வேண்டும் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
2 comments