தி.மு.க., முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன், அ.தி.மு.க.,வில் இணைந்துவிட்டார். ‘ஸ்டாலின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’ என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தி.மு.க., முன்னாள் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன், கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்குப் பின், தி.மு.க.,வில் இருந்து அவர் ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை இன்று சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின், செய்தியாளர்களை சந்தித்த சிம்லா முத்துச்சோழன் :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் போட்டியிட்டாலும் தி.மு.க., டெபாசிட்டை இழக்கவில்லை. உங்களுக்கு அடுத்து வரும் இடைத்தேர்தலில் நிச்சயம் வாய்ப்பு வழங்குவேன் என ஸ்டாலின் உறுதி கொடுத்தார். ஆனால், அப்படி எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. எனக்கு கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.