போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் பிரஜை ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உமேஸ் பாலா ரவீந்திரன் என்ற 45 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சென்ற இவர் அரச ஆவணங்களை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் 2014ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இதற்கு பின்னர், குறித்த நபர் மீண்டும் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இந்த நபரின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இலங்கைக்கு வருகைதர முயற்சித்த போது அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் போலி ஆவண குற்றச்செயல் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபரிடமிருந்து பல்வேறு போலி ஆவணங்கள் மற்றும் கைத்துப்பாக்கியொன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.