காதல் மனைவி அடித்துக்கொலை..கணவர் தூக்கிட்டு தற்கொலை

தமிழக மாவட்டம் திருப்பூரில் தையல் தொழிலாளி ஒருவர், மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் செல்வம் (26). தையல் தொழிலாளியான இவர், தீபா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் இந்த தம்பதி திருப்பூரில் வசித்து வந்துள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கடந்த 14ஆம் திகதி தகராறு ஏற்பட்டுள்ளது.

தனது மனைவியை செல்வம் மோசமாக தாக்கி சுவருடன் சேர்த்து தள்ளியதாக கூறப்படுகிறது. அப்போது குழந்தையை வீட்டிற்கு வெளியே விட்டுவிட்டு உள்பக்கமாக பூட்டியுள்ளனர்.

இதில் தீபா மூச்சு பேச்சின்றி மயக்கமடைந்ததால், அவர் இறந்து விட்டதாக நினைத்த செல்வம் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சன்னல் வழியாக பார்த்துள்ளனர்.

அப்போது செல்வம் தூக்கில் தொங்கியிருப்பதையும், அவரது மனைவி கீழே படுத்த நிலையிலும் இருந்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின்னர் அவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிருக்குப் போராடிய தீபாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலர் தினத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!