இந்த ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையானது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மார்ச் மாதம் கோடைக்காலம் தொடங்கும். இந்த முறை சற்று முன்னதாக பிப்ரவரி கடைசி வாரத்திலேயே கோடை தொடங்கிவிட்டது. கோடைகாலங்களில் இந்தியா பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறது.
வானிலையை பொறுத்த அளவில் இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் வடமேற்கு பதிகுயை தவிர மற்ற பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது, வங்க கடலை ஒட்டியுள்ள பகுதிகள், அசாம், மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த முறை வெப்பம் இயல்பாகதான் இருக்கும்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பீகார் மேற்கு ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை தீவிரமாக இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே இந்த ஆண்டு ஜனவரியில் மிக அதிக அளவு வெப்பம் பதிவாகியிருந்தது. 175 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்ததாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியிருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை வெப்ப அலைகள் தீவிரமாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.