காவல்துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் நெடுஞ்சாலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து திணைக்கள காவல்துறை உத்தியோகத்தர்களின் மாதாந்த கொடுப்பனவை அதிகரித்து புதிய சுற்றறிக்கையை வெளியிட காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி ஒருவரின் மாதாந்த கொடுப்பனவான 1,600 ரூபாவை 6,000 ரூபாவாக அதிகரிக்குமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காவல்துறை சார்ஜன்ட் ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 1,800 ரூபா 6,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பரிசோதகர் தர உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவு 7,000 ரூபாவாகவும், போக்குவரத்து நிலைய அதிகாரிக்கு வழங்கப்படும் 2500 ரூபா கொடுப்பனவு 7,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போக்குவரத்து கடமையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளை மதிப்பீடு செய்து ஊக்குவிப்பதன் மூலம், திறமையான மற்றும் தரமான சேவையைப் பெற எதிர்பார்க்கப்படுகிறது.

வெயில், மழை, இடையூறுகளுக்கு மத்தியில் நெடுஞ்சாலைகளில் சுமார் பன்னிரெண்டு மணிநேரம் போக்குவரத்தை கையாள்வது கடினமான பணி என்பதாலும், வாகன புகை உள்ளிட்ட நச்சுக்களை சுவாசிப்பதால் அதிகமானோர் சுவாசக்கோளாறால் அவதிப்படுவதாலும் இந்த கொடுப்பனவுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு, முதல், இரண்டாம், மூன்றாம் பிரிவுகளின் கீழ் காவல் நிலையங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையும் அதற்கேற்ப மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முதல் பிரிவில் 104 காவல் நிலையங்களும், இரண்டாம் பிரிவில் 59 காவல் நிலையங்களும், மூன்றாம் பிரிவில் 444 காவல் நிலையங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!