மடகாஸ்கரில் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கம்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கரில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அங்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஆண்மை நீக்கம் செய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இச்சட்டம் கடந்த பிப்ரவரி 2ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி Andy Rajoelina இதற்கு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, தற்போது உயர் அரசியலமைப்பு நீதிமன்றம் இச்சட்டத்தை அங்கீகரித்துள்ளது.

அறுவை சிகிச்சை மூலமும், இரசாயன முறையிலும் குழந்தைகளை வன்புணர்வு செய்பவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீதி அமைச்சர் Landy Mbolatiana கூறுகையில், ”குழந்தைகளுக்கு எதிரான பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருவதால், இது அவசியமான நடவடிக்கை” என்றார்.

2,80,00,000 மக்கள் வசிக்கும் மடகாஸ்கரில், கடந்த ஆண்டு குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக 600 வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

அதேபோல் கடந்த மாதத்தில் 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் இதற்கு கடுமையான சட்டம் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!