”பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா, ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழியை திணித்தால், பல நாடுகள் பிறக்கும்” என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க கோரி, சென்னை எழும்பூரில் நடந்து வரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று பேசிய சீமான்,
தமிழை மீட்க வேண்டியதும் காக்க வேண்டியதும் நம் அனைவரின் கடமை. தங்கள் நிலத்தில் தாய் மொழியை பேசுவதற்கும், வழிபடுவதற்கும் அவரவர்க்கு உரிமை உள்ளது. மொழிவாரி மாநிலங்கள் அதற்காகவே பிரிக்கப்பட்டன. இதை பேசினால், பிரிவினைவாதம் பேசுவதாக கூறுகின்றனர்.
பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்று திணித்தால், பல நாடுகள் பிறக்கும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.