பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் இம்மாதம் இந்தியாவிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியன்று இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.
அவரது இந்திய விஜயத்தின் போது மஸ்க் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மோடியுடனான சந்திப்பில் இந்தியாவில் புதிய முதலீடுகள் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைப்பது குறித்து மஸ்க் விவாதிக்க உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த நேரம் அவரை எலான் மஸ்க் சந்தித்து பேசிய போது, 2024 இல் தான் இந்தியா வருவதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதன்படி, இம்மாதம் அவர் தனது விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.