சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ள அயலான் படம் எப்படி இருக்கிறது என இங்கு காண்போம்.
மாவீரன் வெற்றிக்கு பிறகு அயலான் படம் மூலம் சிவகார்த்திகேயன் பொங்கல் ரேஸில் களமிறங்கியுள்ளார்.
எந்த உயிருக்கும் தீங்கு வரக்கூடாது என இயற்கை விவசாயம் செய்பவர் தமிழ் (சிவகார்த்திகேயன்).
வெட்டுக்கிளிகள் இவரது பயிர்களை அழித்துவிட கடனை கட்ட வேலை தேடி சென்னை செல்கிறார்.
அதேசமயம் பூமியில் விழுந்த விண்கல்லின் ஒரு பகுதியை வைத்து, நிலத்தை துளையிட்டு ஆராய்ச்சி செய்கிறார் வில்லன் ஷரத் கெல்கர் (Sharad Kelkar)).
இதற்கிடையில் பூமிக்கு ஒரு நோக்கத்துடன் வரும் வேற்றுகிரகவாசி, தமிழுடன் நட்பாகி அலப்பறை செய்கிறது.
தன்னை ஏலியன் என்று அழைக்கக் கூடாது என்று கோபத்துடன் கூறும் வேற்றுகிரகவாசி உயிரினம், தன்னிடம் உள்ள சக்திகளை கொண்டு செய்யும் வித்தைகள் குழந்தைகளை கவரும் வண்ணம் உள்ளன.
இதனால் முதல் பாதி தொய்வில்லாமல் கலகலப்பாக நகர்கிறது.
யோகிபாபு, கருணாகரன் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.
கதாநாயகி ரகுல் பிரீத் சிங் வழக்கமான கதாநாயகியாக காதல் காட்சிகள், பாடல்களில் வந்து போகிறார்.
இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் வேற்றுகிரகவாசியுடன் இணைந்து ஆக்ஷனில் மிரட்டுகிறார்.
அடுத்தடுத்த காட்சிகள் இப்படி தான் நகரும் என்று கணிக்கும் வகையில் இருந்தாலும், எங்கும் சலிப்பூட்டவில்லை.
மொத்தத்தில் குடும்பத்துடன் ஒன்றாக பார்க்கக்கூடிய படமாக அமைந்துள்ளது அயலான்.
நிறைகள்:
பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், நேர்த்தியான திரைக்கதை, பூமிக்கு அழிவு எனும் பிரச்சனையை கையாண்ட விதம்
குறைகள்:
பெரிதாக குறைகள் இல்லை என்றாலும், ஏ. ஆர். ரஹ்மானின் இசை கவரும்படி இல்லை.
படத்தின் ரெட்டிங்: 3.5/5