நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, 2011ல் சென்னை வளசரவாக்கம் போலீசில், நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். தனக்கு எதிராக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார்.
சீமான் தாக்கல் செய்த மனுவில், ‘2011ல் அளித்த புகாரை, 2012ல் திரும்ப பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் அளித்தார்.இதையடுத்து, நடந்த விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெற நடிகை விஜயலட்சுமி ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் பின் வழக்கு பட்டியலிடப்படவில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி , வரும் , 19 ஆம் தேதி பிற்பகல் 2:15 மணிக்கு புகார்தாரரான நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.