பிரித்தானியாவில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்திக்கொன்ற மர்ம நபர்கள்

பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் 16 வயது சிறுவனை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரிஸ்டோல் நகரில் உள்ள பூங்கா ஒன்றில், 16 வயது சிறுவன் ஒருவனை முகமூடி அணிந்து வந்த இருவர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் அவனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனால் சிறுவன் பலத்த காயத்துடன் காணப்பட்டார்.

இதுகுறித்து ஆம்புலன்ஸ் மற்றும் பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவ பணியாளர்கள் சிறுவனுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

அவனுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குற்றவாளிகளை அடையாளம் காண துப்பறியும் நபர்கள் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரேத பரிசோதனை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரிஸ்டோல் நகர மேயர் Marvin Rees  இதுகுறித்து கூறுகையில்,

‘பாதிக்கப்பட்டவரின் குடும்பம் என்ன அனுபவிக்கிறது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

என் எண்ணங்கள் அவர்களுடன் உள்ளன. இதை நிறுத்த வேண்டும். இந்த நேரத்தில் குடும்பம், காவல்துறை மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு ஆதரவளிக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!